Sunday 27 August 2017

Anna University - Strict Rules for Using Mobile Phones

மொபைல்போன் பயன்படுத்த தடை அண்ணா பல்கலை கட்டுப்பாடு:

அண்ணா பல்கலை மற்றும் உறுப்பு கல்லுாரி களின் வகுப்பறையில் மொபைல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறும் மாணவர்கள் மீது, ஒழுங்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.

அண்ணா பல்கலை இணைப்பில் உள்ள இன்ஜினியரிங் கல்லுாரிகளுக்கு, ஒரு வாரத்திற்கு முன், அரசின் கவுன்சிலிங் வழியே, மாணவர் சேர்க்கை முடிந்து விட்டது.தற்போது நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களை நிரப்பிக் கொள்ள, தனியார் கல்லுாரிகளுக்கு, வரும், 31ம் தேதி வரை அண்ணா பல்கலை அனுமதி அளித்துள்ளது.

இந்நிலையில், அண்ணா பல்கலை மற்றும் அதன் உறுப்பு கல்லுாரிகளில், முதலாம் ஆண்டுக்கான வகுப்புகள் துவங்கி உள்ளன. இதில், மாணவர்களுக்கு, பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

பள்ளி படிப்பை முடித்து விட்டு வரும் மாணவர்கள், கல்லுாரி என்பதால், ஜாலியாக வகுப்பை, 'கட்' அடித்து, ஊர் சுற்றக்கூடாது என்றும், கல்லுாரிக்கு வராவிட்டால், பெற்றோரின் மொபைல் போன் எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும் என்றும், அண்ணா பல்கலை கண்டிப்பான உத்தரவு பிறப்பித்துள்ளது.

அண்ணா பல்கலையின், 17 உறுப்பு கல்லுாரிகளிலும், சென்னை அண்ணா பல்கலை வளாக கல்லுாரி களிலும், பல்வேறு கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டுள்ளன.இதன்படி, மாணவர்கள் வகுப்பு நேரத்தில், மொபைல் போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

வகுப்பிற்குள் மாணவர்கள் நுழையும் போது, மொபைல் போனை அணைத்து வைக்க வேண்டும். வகுப்பில் அமர்ந்து, 'பேஸ்புக், வாட்ஸ் ஆப், டுவிட்டர்' போன்ற சமூக வலைதளங்களில், நேரத்தை வீணாக்க கூடாது.

வகுப்பில், மொபைல்போன் பயன்படுத்தப்படுகிறதா என்பதை, ஆசிரியர்கள் குழு ஆய்வு நடத்தும். இதில், மாணவர்களின் மொபைல்போன் கண்டுபிடிக்கப்பட்டால், போன் பறிமுதல் செய்யப்படும்.பின், பெற்றோரை அழைத்து வந்து கடிதம் கொடுத்த பிறகே, மீண்டும் வழங்கப்படும் என, 'கிடுக்கிப்பிடி' போடப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment